சென்னை: கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, யமஹா ஊழியர்கள் நடத்தி வந்த 55 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் யமஹா தொழிற்சாலையில் தொழிற்சங்கம் துவங்கியதால் 2 தொழிலாளர்களை யமஹா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதனால் தொழிலாளர்கள் இருவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 2 மணியில் பேச்சுவார்த்தை தொடங்கியது.