கந்தசஷ்டி விழா கோலாகலமாக நிறைவடைந்தது முருகன்-தெய்வானைக்கு திருக்கல்யாண வைபம்

* ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு  

*  சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு

சென்னை: முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண வைபத்துடன் நிறைவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி விதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பாரிமுனை கந்தகோட்டம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியர், குன்றத்தூர் முருகன், குரோம்பேட்டை குமரன் குன்றம், காஞ்சிபுரம் குமரகோட்டம் உள்ளிட்ட கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காவடி மண்டபத்தில் உள்ள ஆறுமுகசாமி சமேத வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் நறுமண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வழிபட்டனர்.

கடந்த 9ம் தேதி தங்க கவசம், 10ம் தேதி திருவாபரணம், 11ம் தேதி வெள்ளி கவசம், 12ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை லட்சார்ச்சனையும் மாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் துவங்கின. முன்னதாக, திருத்தணி முருகன் கோயிலில் பிரசாத கடை நடத்திவரும் திருச்செந்தூர் அரிகரமுத்து குடும்பத்தினரின் உபயத்தில் பழம், திருமண உடைகள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் மேளவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர், தெய்வானை கழுத்தில் முருகப்பெருமான் சார்பில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் முருகனின் திருக்கல்யாணத்தை தரிசித்து, மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த சுமங்கலி பெண்களுக்கு பூ, பழம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, பேஷ்கார் அன்பழகன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தங்க குதிரை வாகனத்தில் முருகப்பெருமான தங்க வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். நேற்று காலை கந்தசஷ்டி கொடியிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவத்தை கண்டு களித்தனர். இதையடுத்து தங்க மயில் வாகனத்தில் திருக்கல்யாண கோலத்துடன் முருகப்பெருமான் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: