×

‘அரோகரா'பக்தி முழக்கம் விண்ணை பிளந்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, நவ.15: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் ‘அரோகரா'' பக்தி முழக்கம் விண்ணை பிளந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபதிருவிழா நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். இங்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் படிக்க, மகாதீபாராதனைக்கு பிறகு அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளம் முழங்க தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.
அப்போது கோயிலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா' என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். கொடியேற்றத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்பி வனரோஜா, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) எம்.பிரதாப், கோயில் இணை ஆணையர் ஞானசேகர், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாக்ஸ். பக்தர்கள் விரதம் தொடங்கினர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, கார்த்திகை தீபதிருவிழா தொடங்கிய நேற்று திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். அதனால் விரத மாலை மற்றும் காவி உடைகள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

Tags : Aurora ,Thiruvannamalai Annamalaiyar ,
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...