சேலம், நவ. 14: சேலம் கோட்டத்தில் இருந்து 4,609 டன் காய்கறி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பியதில், ₹1.73 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் என 140க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு செல்லும் ரயில்களில் நாடு முழுவதும் பார்சல் அனுப்பும் வசதி உள்ளது. இதற்காக சேலம் கோட்டத்தில் 32 ரயில் நிலையங்களில் பார்சல் பதிவு சேவை நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள், 100 கிலோ முதல் பொருட்களை அனுப்புலாம். இதனால் விரைவான நேரத்தில், குறைவான செலவில் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்களில் அனுப்ப முடியும்.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து காட்டன், காய்கறிகள், கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறன. கடந்த மாதம் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் காய்கறிகள், ஜவுளி, கோவையில் இருந்து காய்கறிகள், ஜவுளி, கரூரில் இருந்து கொசுவலை என மொத்தம் 4609டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.மேலும்,சேலம்,நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய உரம் சிமெண்ட், கோதுமை ஆகியவை தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்களில் அதிகமாக பார்சல்கள் அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் சேலம் கோட்டத்தில் இருந்து 4609 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் ₹ 1.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ரயில்களில் பார்சல்களை அனுப்பினால்,விரைவான நேரத்தில், பார்சல்கள் டெலிவரி செய்யப்படும்’’, என்றனர்.