அதிவேகமாக வாகனம் ஓட்டிய 96 பேரின் லைசென்ஸ் ரத்து

சேலம், நவ. 14: சங்ககிரியில், அதிவேகமாக  வாகனம் ஓட்டிய 96 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சங்ககிரி, இடைப்பாடி, மகுடஞ்சாவடி உள்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் உள்ளதா? என்றும், விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனபால், விஸ்வநாதன் ஆகியோர் கடந்த மாதம் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறையை மீறி இயக்கிய 156 வாகனங்களுக்கு ₹4.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து கூறுகையில், ‘‘சங்ககிரியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் ₹4.50லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக வேகமாக வாகனம் ஓட்டியது,  செல்போன் பேசியபடியும், போதையிலும் வாகனம் ஓட்டியது என மொத்தம் 96 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வாகன தணிக்கை நடத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: