கரூர், நவ. 14: கரூர் தாந்தோணிமலையில் உள்ள கணபதிபாளையம் வடக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் கணபதிபாளையம் வடக்குத் தெரு பகுதி உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியை சுற்றிலும் உள்ளன.முத்துலாடம்பட்டி, தாந்தோணிமலை, காமராஜ் நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான பிரதான சாலையாக இந்த தெரு சாலை உள்ளது. மேலும் இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களும், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. சாலை கடந்த பல மாதங்களாகவே பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அனைத்து தரப்பு பொதுமக்கள் நலன் கருதி மேடும் பள்ளமுமாக உள்ள இந்த கணதிபாளையம் வடக்குத்தெரு சாலையை சீரமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.