திருமங்கலம், நவ.14: திருமங்கலம் விருதுநகர், திருமங்கலம் ராஜபாளையம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவே வைக்கப்பட்டிருக்கும் போலீசாரின் பேரிகார்டுகளே விபத்துகளுக்கு வழிவகுப்பதாக டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்துகளை தவிர்க்கும் வகையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலை மற்றும் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்துள்ளனர். விபத்தினை தவிர்க்க வைக்கப்பட்ட இந்த பேரிகார்டுகளே தற்போது விபத்துகளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளிக்குடி, மையிட்டான்பட்டி, ஆவல்சூரன்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் உள்ள பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதி விபத்துகள் அதிகரித்துள்ளன. இதேபோல் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி, புதுப்பட்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பேரிகார்டுகளை வைத்து விபத்தினை தவிர்ப்பதற்கு பதில் நாளுக்கு நாள் பேரிகார்டுகளால் விபத்துகள் அதிகரிப்பதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தனியார் பஸ்கள், கார்கள் போன்றவை பேரிகார்டுகளை கண்டுகொள்ளாமல் அதேவேகத்தில் செல்கின்றன.