மதுரை, நவ. 14: கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட முடியாத சிக்கல் நீடிக்கும் நிலையில் மாநகரின் போக்குவரத்து நெரிலை தீர்க்க மெட்ரோ ரயில் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை முதல் மாநகரின் மைய பகுதி வழியாக திருநகர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆய்வுடன் நிற்கிறது. மதுரை மாநகரின் எல்கை 148 சதுர கி.மீ. பரப்பில் உள்ளது. அதையும் தாண்டி மாநகரம் விரிவடைந்து கொண்டே போகிறது. சுற்றிலும் நான்கு வழிச்சாலைகள் அமைந்திருந்தாலும், மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக நீடிக்கிறது. நெருக்கடிக்கு தீர்வு காண 2011ல் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டம் கனவாகி கலைந்தது. இதன் பிறகு சென்னையை போல் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என 2012ல் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி ஒத்தக்கடை வேளாண் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மாவட்ட நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளி வீதி, மேலவெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, வழியாக திருநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 35 கி.மீட்டர் தூரம் மெட்ரா ரயில் பாதை அமைக்க வாய்ப்புள்ளதாக பொறியியல் வல்லுனர்கள் குழு முதற்கட்ட ஆய்வில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க பரிந்துரை அளித்தது. “இந்த வழித்தடங்களில் தற்போதுள்ள அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்க பாதையிலும் தண்டவாளம் அமைத்து மெட்ரோ ரயில் இயக்க சாத்திய கூறு உள்ளது” என்பது அந்த குழுவின் யோசனையாக அரசுக்கு அளிக்கப்பட்டது.