திருப்புத்தூர், நவ. 14: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலையில் சுப்பிரமணியசுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கடந்த நவ. 8ம் தேதி கந்தசஷ்டியின் முதல் நாள் விழா துவங்கியது. முதல் நாள் முதல் தினந்தோறும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. 6ம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணியளவில் முருகப்பெருமானுக்கு சண்முகா அர்ச்சனையும், சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் முருகப்பெருமான் திருத்தளிநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு சிவகாமி அம்மன் சன்னதி சென்று வேல் வாங்கினார். பின்னர் கீழரதவீதி பிள்ளையார் தேர் அருகே அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார். இதில் சஷ்டி விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7ம் நாள் விழாவான இன்று காலையில் திருமுருகன் திருப்பேரவையிலிருந்து திருமணத்திற்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வருவார்கள். பின்னர் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானை அம்பாளும் திருநாள் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளுவார்கள். அதனை தொடர்ந்து 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.