பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் மருத்துவ குழுவினர் முகாம் ஊசூர் அடுத்த அத்தியூரில்

அணைக்கட்டு, நவ. 14: ஊசூர் அடுத்த அத்தியூரில் பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சாரதாம்மாள்(51). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகமானதால் வீட்டிலிருந்தவர்கள் அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அத்தியூர் பகுதியில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மருத்துவர்கள் கிராமத்தில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் நேற்று ஊசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமம் முழுவதும் முகாமிட்டு கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories: