வேலூர், நவ.14: பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருத்தம் செய்யவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள், அரசு தேர்வுகள் துறை இணைய தளத்தில் மாவட்டம் வாரியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிளஸ்1 மாணவர்களின் விவரங்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. அதற்கு ஏற்றவாறு, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் குறியீடை பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளை, திருத்தம் செய்து கொள்ளலாம். அதன்படி, இறுதிப்பட்டியல் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில் உள்ள பிழை, திருத்தம் விவரங்களுக்கு ஓரிரு நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.