விழுப்புரம், நவ. 14: ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.