புதுச்சேரி, நவ. 14: புதுவையில் நிலுவை சம்பளம், ஊதியத்தை வழங்கக்கோரி குருமாம்பேட் சி- யூனிட்டில் பணியாற்றும் ஏஎப்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். புதுவையில் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளி போனசை ஒருவாரத்தில் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஏஎப்டி பி-யூனிட் நுழைவு வாயிலில் நேற்று தர்ணா நடைபெற்றது. தொழிற்சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஏஐடியுசி கவுரவ தலைவர் வி.எஸ்.அபிஷேகம் முன்னிலை வகித்தார். இதில் அண்ணா தொழிற்சங்கம் சின்னதுரை, ஐஎன்டியுசி வீரமுத்து, அம்மநாதன், தொமுச ரவி, பிஎம்எஸ் இளங்கோவன், என்ஆர்டியுசி வாழுமுனி, சத்தியசீலன் உள்ளிட்ட சங்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தர்ணாவில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.