புதுச்சேரி, நவ. 14: புதுவையில் நிலுவை சம்பளம், ஊதியத்தை வழங்கக்கோரி குருமாம்பேட் சி- யூனிட்டில் பணியாற்றும் ஏஎப்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். புதுவையில் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளி போனசை ஒருவாரத்தில் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஏஎப்டி பி-யூனிட் நுழைவு வாயிலில் நேற்று தர்ணா நடைபெற்றது. தொழிற்சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஏஐடியுசி கவுரவ தலைவர் வி.எஸ்.அபிஷேகம் முன்னிலை வகித்தார். இதில் அண்ணா தொழிற்சங்கம் சின்னதுரை, ஐஎன்டியுசி வீரமுத்து, அம்மநாதன், தொமுச ரவி, பிஎம்எஸ் இளங்கோவன், என்ஆர்டியுசி வாழுமுனி, சத்தியசீலன் உள்ளிட்ட சங்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தர்ணாவில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனிடையே ஏஎப்டியில் பணியில் உள்ள தொழிலாளர்கள் நேற்று 2வது நாளாக அங்கு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட 2 கோரிக்கைகளை முன்வைத்து குருமாம்பேட்டில் உள்ள ஏஎப்டி சி- யூனிட்டில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 ஷிப்டுகளிலும் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.