ஸ்பிக்நகர் அருகே இழுத்தடிக்கப்பட்ட சாலைபணி நிறைவு

ஸ்பிக்நகர், நவ.14: ஸ்பிக்நகர் அடுத்து அமைந்துள்ளது பாரதிநகர். இந்த பகுதியில் கற்களை கொண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் மிகவும் குறைவான தூரம் மட்டுமே சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் காணப்பட்டது. மீதமுள்ள பகுதியில் பணி நடைபெறுவதும் பின்னர் நிறுத்தப்படுவதுமாக இருந்து வந்தது.

மேலும் சாலையின் பள்ளமான இடங்களில் மணலை கொண்டு நிரப்பி சமன் செய்த பிறகு கற்களை அடுக்குவதற்காக சாலையில் மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போது பெய்த மழையால் மணலின் மீது பட்டு அந்த பகுதி முழுவதும் சகதிகாடாக காட்சியளித்தது.

இதனால் இரண்டு நாட்களில் மட்டும் அங்கு 10க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாரதிநகர் பகுதியில் சகதியாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 25ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை துரிதபடுத்தினர்.  தற்போது சாலை முழுவதுமாக அமைக்கப்பட்டு நிறைவடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: