தூத்துக்குடி, நவ. 14: மேலதட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலதட்டப்பாறை ஊராட்சியை சேர்ந்த பேரையா தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: மேலத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, எஸ்.எஸ் காலனி, செட்டியூரணி கிராமங்களில் சுமார் 650க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ரயில்நிலையம், காவல்நிலையம், பள்ளிகள் உள்ளன.
தற்போது மேலத்தட்டப்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான குடிநீரை உமரி கோட்டையிலுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து பம்பிங் செய்து வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் குடிநீரானது அதிக உப்புத்தன்மை உடையதாகவும் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சீவலப்பேரி ஆற்று குடிநீர் திட்டத்தின் கீழ் மேலதட்டப்பாறை, உமரிக்கோட்டை ஊராட்சி பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.