×

பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்த கும்பல் கைது

சிவகங்கை, நவ.8: சிவகங்கை அருகே ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 5ம் தேதி இரவு மலம்பட்டி, மானாகுடி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று செல்வது குறித்து சிவகங்கை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த எஸ்ஐக்கள் பூமிநாதன், ஜான்பிரிட்டோ ஆகியோர் காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ஐந்து கத்தி, அரிவாள், வாள், மிளகாய் பொடி பாக்கெட் உள்ளிட்டவை இருந்தன. உள்ளே இருந்த ஆறு பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கல்லல் அருகே பாகனேரியை சேர்ந்த ரெத்தினம் மகன் விவேக்(எ)விக்கி(22), முருகன் மகன் சந்துரு(எ)சுபாஸ்சந்திரபோஸ்(22), மூர்த்தி மகன் முத்துக்காமாட்சி(26), அன்பழகன் மகன் கதிர்வேல்(27), சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தை சேர்ந்த மதுரைவீரன் மகன் பசுபதி(22), தேவகோட்டை அருகே சீனமங்கலத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் முத்துப்பாண்டி(26) என தெரியவந்தது. இதில் பலர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இதையடுத்து ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாகனங்களில் செல்வோரை தாக்கி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்கும் கும்பல் இவர்கள் என கூறப்படுகிறது. எனினும் ஏராளமான ஆயுதங்களுடன் வலம் வந்ததால் இப்பகுதியில் முக்கிய பிரமுகர்கள் யாரையும் கொலை செய்ய திட்டமிட்டு இக்கும்பல் வலம் வந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்