திருமங்கலம், நவ.8: தீபாவளியையொட்டி திருமங்கலம் நகராட்சி பகுதியில் வழக்கத்தை விட இரு மடங்கு குப்பைகள் குவிந்தன.மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் தினசரி 24 டன் குப்பைகள் சேரும். வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளில் சேரும் 24 டன் குப்பைகளை நகராட்சி துப்பரவுபணிஊழியர்கள் வீடுவீடாக சென்று சேகரித்து வருவர். நேற்று முன்தினம் தீபாவளி பண்டியையொட்டி பட்டாசு வெடித்ததில் 27 வார்டுகளிலும் சுமார் 50 டன் குப்பைகள் சேர்ந்தன.
வழக்கத்தை விட இரு மடங்கு சேர்ந்த இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் விரைவாக அள்ளிச் சென்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`` தீபாவளியையொட்டி 50 டன் குப்பைகள் வீடுகள், கடைகள் மற்றும் வீதிகளில் சேர்ந்தது. தீபாவளி அன்றும் குப்பைகள் வாங்கப்பட்டன. மறுநாளான நேற்று குப்பைகள் அள்ளப்பட்டன. வழக்கமாக நகராட்சி லாரிகளில் 10 டிரிப் அடித்து குப்பைகளை ராஜபாளையம் ரோட்டிலுள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வோம். நேற்று காலை முதல் 20 டிரிப் லாரிகள் சென்று நகரில் சேர்ந்த குப்பைகளை கிடங்கில் கொட்டினர். இங்கு குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து அகற்றப்படும்’’ என்றனர்.