வாடிப்பட்டி, நவ. 8: வாடிப்பட்டி அருகே ஆற்றில் குளித்த போது மாயமான உறவினரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது உறவினர்கள் 4வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுரை வாடிப்பட்டி தாலுகா சின்னஇரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பென்னிராஜ் மகன் பாரதி(25). பந்தல் அமைப்பாளரான இவர் நேற்று காலை வாடிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி முல்லை பெரியாறு பிரதான கால்வாயில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாரதி ஆற்றில் மாயமானார். அவரை தேடும் பணியில் சோழவந்தான் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆற்றில் மாயமான பாரதியை உடனே மீட்டுதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.