சேலம், நவ.8: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்ததால், தமிழகத்தில் நடப்பாண்டு பட்டாசு விற்பனை 30 சதவீதம் சரிந்தது என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்தது. இதன் எதிரொலியாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியது. நீதிமன்ற அறிவிப்பால் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் பட்டாசு விற்பனை நடக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து வியாபாரிகள் ெமாத்தமாக கொள்முதல் செய்து, விற்கும் இடத்திற்கு கொண்டு வருவோம். ஆயுதபூஜைக்கு பிறகு, பட்டாசுகளை தரம் பிரித்து சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைப்போம்.