காடையாம்பட்டி, நவ.8: காடையாம்பட்டி அருகே, தும்பிபாடி ஊராட்சியில், கற்கள் பெயர்ந்த முள்ளிசெட்டியப்பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி கிராமத்தில் சாமியார் காட்டுவளவு, சின்னநாகலூர், காட்டுவளவு வழியாக முள்ளிசெட்டியப்பட்டி செல்லும் சாலை கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு ஜல்லி கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தார்சாலை அமைக்காமல் கரடுமுரடாக அப்படியே விட்டுள்ளனர். இதனால் மண் அரிப்பு, ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என பல தரப்பினர் சாலையில் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தர கோரி, ஓமலூர் பேரூராட்சி, மற்றும் தும்பிபாடி ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.