தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) தாலுகா வாரியாக அந்தந்த தாசில்தார் தலைமையில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. இதன்படி தூத்துக்குடி தாலுகாவில் மீளவிட்டான் பகுதி 1, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகாவில் மணப்பாடு, சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளகுறிச்சி , கோவில்பட்டி தாலுகாவில் பிச்சைத்தலைவன்பட்டி ஆகிய கிராமங்களில் இம்முகாம் நடைபெறும். விளாத்திகுளம் தாலுகாவில் நடுக்காட்டூர், எட்டயபுரம் தாலுகாவில் சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மேல அரசடி, கயத்தாறு தாலுகாவில் காலங்கரைப்பட்டி கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதே போல் ஏரல் தாலுகாவில் சிவகளை கிராமத்திலும் இம்முகாம் நடைபெறவுள்ளது.