ஓமலூர் இளைஞர் கத்தார் நாட்டில் பலி

ஓமலூர், நவ.2: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்நாத்(34), கடந்த 5 ஆண்டாக கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு நந்தினி(29) என்ற மனைவியும், 5 வயதில் மகளும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, நந்தினிக்கு கத்தார் நாட்டில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர்கள், கோகுல்நாத் பணியின் போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி மற்றும் குடும்பத்தினர், கோகுல்நாத்தின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் ரோகிணியிடம் மனு கொடுத்தனர். மனு கொடுத்து 4 நாட்கள் ஆகியும், இன்னும் கோகுல்நாத்தின் உடல் இந்தியா கொண்டு வரப்படவில்லை. இதனால், அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Related Stories: