தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய தந்தை வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில்

வேலூர், நவ.2: வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தையே பிறப்பு சான்றிதழ் வழங்கிய வினோதம் அனைவராலும் வியப்புடன் பேசப்படுகிறது.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவர் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கு இவர்தான் பிறப்பு, இறப்பு பதிவாளராகவும் உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 29ம் தேதி காலை பிரசவ வலியுடன் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மறுநாள் 30ம் தேதி காலை 10.22 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.இக்குழந்தைக்கான பிறப்பு சான்று நேற்று காலை வழங்கப்பட்டது. இந்த பிறப்புச்சான்றை தந்தையான தமிழரசுவே கையொப்பமிட்டு வழங்கினார். தான் பெற்ற குழந்தைக்கு தந்தையே பிறப்புச் சான்றிதழ் வழங்கியது மிகவும் அரிதான நிகழ்வு என்று ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலைய மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: