இடைப்பாடியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிப்பு

இடைப்பாடி, அக்.18: இடைப்பாடி நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலகம், கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசை பஸ் நிலையம், அம்மா உணவகம் ஆகிய 4 இடங்களில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் முருகன்(பொ), முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் தலைமை வகித்தனர். முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ராமன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் தங்கவேல், முருகன், ஜான்விக்டர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க நிர்வாகிகள், வணிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கைகளை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பூலாம்பட்டி பேரூராட்சி சார்பில் பஸ்நிலையம், பில்லுகுறிச்சி, கூடக்கல் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. பூலாம்பட்டி செயல் அலுவலர் சசிகலா தலைமை வகித்தார். பூலாம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் காளியண்ணன், ஐயப்ப சேவா சங்க  தலைவர் சித்தன், ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப், உழவர் மன்ற  அமைப்பாளர் நடேசன், பால் சொசைட்டி சங்க தலைவர் மணி முன்னிலை வகித்தனர்.

இதேபோல், தேவூர் அருகே மயிலம்பட்டி, புள்ளிக்கவுண்டம்பட்டி அரசு பள்ளியில் கை கழுவும் தினம், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. கொங்கணாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் குலோத்துங்கன் தலைமையில் கைகழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: