கோபால்பட்டி, அக். 18: சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் தொடக்க ேவளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்க செயலாளராக வரதராஜன், உறுப்பினர்களாக செல்வக்குமார், அலெக்ஸ் உள்ளிட்டோர் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் நடந்த குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் வங்கியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் உள்ளதாக செல்வக்குமார், அலெக்ஸ் ஆகியோர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவிற்கும், குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறை தலைவருக்கும் இருவரும் புகார் மனு அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் கூட்டுறவு சங்க கள மேலாளர் மணிகண்டன் தலைமையில் வங்கியில் ஆய்வு நடந்தது. அப்போது போதையில் வந்த சிலர், செல்வக்குமார் மற்றும் அலெக்சுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கொலைமிரட்டல் விடுத்தவர்கள் வரதராஜனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.