செம்பட்டி, அக். 18: நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பூ விவசாயம் நடக்கிறது இங்கு விவசாயம் செய்யப்படும் மல்லிகை, ரோஜா, முல்லை, சம்மங்கி போன்ற பூக்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வருகிறது. இங்கு பூக்களை வாங்கி பெண்களை வைத்து கட்டி ஐஸ் பாக்ஸ்களில் வைத்து திருச்சிக்கு லாரிகளில் அனுப்பு கின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் பூக்கள் துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்குச் செல்கிறது. நிலக்கோட்டை மல்லிகை பூவிற்கு துபாயில் நல்ல வரவேற்பு இருப்பதால் தினமும் மற்ற பூக்களை விட அதிகளவில் மல்லிகை பூக்கள் அனுப்ப வருகின்றனர். பெண்கள் கட்டும் மல்லிகைப் பூ எடை போடப்பட்டு ஒரு கிலோ இரண்டு கிலோ பாக்கட்டுகளாக பட்டர் ஷூட் பேப்பரால் போடப்பட்டு தெர்மா கூல் பெட்டிகளில் நடுவில் வைத்து சுற்றியே ஜெல்லி ஐஸ் பாக்கெட்டுகளை வைத்து பேக்கிங் செய்து, லாரிகளில் ஏற்றி திருச்சி அனுப்புகின்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் நாட்டுக்குச் செல்கிறது.