நாகர்கோவில். அக்.18: அரசு போக்குவரத்து கழகங்களில் பணி செய்யும் மாற்று திறனாளர்கள் இந்திய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பதால் அவர்களின் பணி பதிவேட்டில் மாற்று திறனாளி என அடையாளப்படுத்தி, அவர்களை மாற்று திறனாளி பணியாளர் என பதிவு செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான ஊர்திப்படி ரூ.2500ஐ உடனடியாக வழங்க வேண்டும். என்ட் டூ என்ட் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மாற்று திறனாளி கண்டக்டர்கள் அனைவருக்கும் இலகுவான பணி வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் மாற்று திறனாளிகளுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்று திறனாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் மரிய ஸ்டீபன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
கவுரவ தலைவர் வக்கீல் ஜெரால்டு, மாற்று திறனாளர்களுக்கான தென் மாநில தேசிய அமைப்பான சக்ஷம் மாநில செயலாளர் வேலுமயில், மாவட்ட தலைவர் என். சுப்பிரமணி, மாவட்ட ஆலோசகர் கோபக்குமார், நகர தலைவர் மகிழ்வண்ணன், நகர செயலாளர் தங்ககுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ஆர். காமராஜ், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், மாற்று திறனாளர்கள் சங்க முன்னாள் சங்க தலைவர் தேவதாசன், மாற்று திறனாளர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் முருகன், மாநில இணை செயலாளர் அந்தோணி, மாநில பொருளாளர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.