×

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்

பாகூர், அக். 17:  வில்லியனூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் அடுத்த மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்- சுஜாதா தம்பதியரின் மகள் பவித்ரா என்ற தனம் (23). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அபிசேகப்பாக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற பவித்ரா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாய் சுஜாதா தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.  
 கடந்த 13ம் தேதி தனது காதலனுடன் பவித்ரா பஸ்சில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே தலை வலிப்பதாக கூறிவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். உடன் வந்த காதலன் அபிசேகப்பாக்கத்தில் இறங்கியுள்ளார். ஆனால் அதன்பின், பவித்ரா என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை