×

கடலூர் பெண்ணையாற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கடலூர், அக். 17: கடலூர் தென்பெண்ணையாற்றில் நண்பர்களுடன் குளித்தபோது தொழிலாளி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர் அருகே பனங்காட்டுகாலனியை சேர்ந்தவர் தக்காளி(எ) மணிமாறன்(29). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, தன் நண்பர்களான பாண்டியன், செல்வமணி, கஜேந்திரன் ஆகியோருடன் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள தடுப்பணை பாலத்தின் வழியே கும்தாமேடு பகுதிக்கு மது அருந்த சென்றார். அங்கிருந்து போதையில் திரும்பிய அவர்கள் நால்வரும் பெண்ணையாற்றில் இறங்கி குளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஆற்றில் மணிமாறனை காணவில்லை. தங்களை விட்டு விட்டு அவர் மட்டும் தனியாக வீட்டுக்கு சென்று விட்டதாக கருதிய நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாக ஊர் திரும்பினர்.

அங்கு அவர்கள் மணிமாறன் வீட்டிற்கு சென்று விசாரித்த போது அவர் வரவில்லை என்ற தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரவு முழுவதும் வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் தென்பெண்ணையாற்றிற்கு வந்து மணிமாறன் குளித்த பகுதியில் தேடத்தொடங்கினர்.
அப்போது அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மணிமாறனின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரின் சடலம் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மணிமாறன் போதையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாரா இல்லை அவரின் சாவிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமாறனுக்கு சுபாஷின்(25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

Tags : Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...