கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதிராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஷானாவுல்லா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் முஸ்தாக்அலி வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சூரியபிரகாஷ் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய கட்டண கழிப்பிடத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 5 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதை கண்டுக்கொள்ளாத நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தும், நகராட்சியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாராததால் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் பிரியதர்ஷணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.