கிருஷ்ணகிரி, அக்.17: காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு பாலத்திற்கும் இடையில் 5 அடி இடைவெளியே உள்ளது. மேலும் மேம்பாலத்தின் தடுப்பு சுவரின் உயரமும் மிக குறைவாக உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளுக்கு வாகனங்களை நிறுத்தி சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பாலத்தின் இடையில் உள்ள இடைவெளி தெரியாமல் ஆற்றில் விழுந்து இறந்து விடுகின்றனர். இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். எனவே, மேம்பாலத்தில் மின்விளக்கை பொருத்தி, இரண்டு பாலத்திற்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரையும் உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.