ஒட்டன்சத்திரத்தில் அறிவிக்காத மின்தடையால் பொது மக்கள் அவதி

ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர, இரவில் சாரல்மழை பெய்தால் வீட்டின் வெளியேயும் தூங்க முடியவில்லை. இதனால் விடிய, விடிய தூக்கத்தையும் தொலைக்க நேரிடுகிறது.

மேலும் பகலில் அறிவிக்கப்படாத மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியவில்லை. இதனால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பதில் கேட்டால் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே ஒட்டன்சத்திரத்தில் நிலவும் இரவு மின்தடையை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: