தா.பேட்டை, அக்.16: முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முசிறி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கருப்பண்ணன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி கலெக்டரை கேட்டுக் கொள்வது, ஓய்வூதியர்களுக்கான அரசு அடையாள அட்டை, பொங்கல் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மாவட்ட கருவூல அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்து ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் தமிழகஅரசு பொங்கல் பரிசு வழங்கிட கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.