ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட 115 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் சென்றனர்

திருச்சி, அக். 16: சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட 115 பயணிகள் நேற்று மாற்று விமானத்தில் மீண்டும் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. மீண்டும் இந்த விமானம் 4 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டும். அதில் செல்லவிருந்த  115 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு மாலை 4 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு ரன்வேயில் ஓடி மேலே பறக்கவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காணரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பொறியாளர்கள் சோதனை செய்தபோது கேபின் பகுதியில் ஏசி இயந்திரம் இயங்காதது தெரிய வந்தது. இதையடுத்து அதனை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக சரி செய்ய இயலாததால் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமான பழுதை உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் காலியாகவே இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள் அனைவரும் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு தங்க வைக்கப்பட்டனர். அதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் அனைவரும் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: