×

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர், அக். 16: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கும் என்ற நிலையில்  தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்ட  காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 முதல் 6ம் தேதி வரையில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. மேட்டூர் அணையானது 4 முறை நிரம்பிய நிலையில் டெல்டா பாசனத்திற்கு ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் நீர் கிடைக்காமல் இருந்து வந்ததால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந் நிலையில் இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்திய நிலையில் இந்த மழையானது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு வார கால இடைவெளிக்கு பின்னர் நேற்றும் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, குடவாசல், நன்னிலம் , நீடாமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்னலுடன் மிதமான மழையாக பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி