×

பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் வரும் 20ம் தேதி முதல் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி துவங்குகிறது. இதுகுறித்து ஐடிஐ முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தங்க நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சி பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கத்தை கணக்கிடும் முறை, தங்கத்தை உரைக்கல்லில் உரசி தரம் அறியும் முறை, உரசாமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு கடை, ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யமுடியும். பயிற்சி சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 மணி நேர பயிற்சியாக, பாட வகுப்புகள் 40 மணி நேரமும், செய்முறை பயிற்சி வகுப்புகள் 60 மணி நேரமும் நடைபெறும். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இதில் சேரலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இளநிலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியானது வரும் 20ம் தேதி பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் துவங்கப் படவுள்ளது. இதில் சேர விரும்புவோர் முதல்வர், பர்கூர் கூட்டுறவு ஐடிஐ, பர்கூர் என்ற முகவரிருக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா