கும்பகோணம், அக். 16: கும்பகோணம் பெருநகர திமுக கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. நகர திமுக அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராசாராமன், நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமிழழகன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 18ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது. 20 பேர் கொண்ட வாக்குச்சாவடி குழு பட்டியலை இறுதி செய்ய வேண்டும்.
பெண்கள், இளைஞர்கள் இணைந்து இன்று முதல் ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை சொல்வதோடு ஊழல் முறைகேட்டில் உள்ள அதிமுக அரசின் வேதனைகளை எடுத்துக்கூறி வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். உறவினருக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என நீதிமன்றத்திலேயே வாதாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ளதை வரவேற்கிறோம். எனவே தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தொமுச ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டை
வழங்கப்பட்டது.