தஞ்சை, அக். 16: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள், பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டிணம் வெளிவயல் கிராமத்தில் வரும் 24ம் தேதி துவங்குகிறது. இதில் கையுந்து பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் அணியினர் மாநில போட்டியில் கலந்து கொள்வர். மாநில அளவிலான போட்டியில் கடற்கரை கால்பந்து விளையாட்டில் ஆண்கள் 5 பேரும், பெண்கள் 5 பேரும், கடற்கரை கையுந்து பந்து போட்டியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 2 பேரும், கடற்கரை கபடி போட்டியில் ஆண்கள் 6 பேரும், பெண்கள் 6 பேரும் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட அளவிலான கடற்கரை குழு போட்டியில் முதலிடம் பெறும் அணியில் உள்ள அனைவருக்கும் தலா ரூ.500, 2ம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.350, 3ம் இடம் பிடிப்போருக்கு தலா ரூ.200ம் பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறனை வெளிப்படுத்தலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.