ஜெயங்கொண்டம்,அக்.16: உடையார்பாளையம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையம் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 37 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகை வழங்கப்படவில்லை. ஊதியத்தை குறைவாக கொடுப்பதாகவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் துப்புரவாளர்களை அநாகரிகமாக பேசுவதாகவும், முறையாக பணி வழங்காமல் மாற்றி மாற்றி வழங்குவதாகவும், பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் வரவில்லை, பேரூராட்சி செயல் அலுவலர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விட்டார். இதனால் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி மேற்கொண்டு ஊதிய உயர்வுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கலந்துகொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.