மதுரையில் நள்ளிரவில் பயங்கரம் ரவுடி உட்பட 2 பேர் அடுத்தடுத்து படுகொலை

மதுரை, அக். 16: மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் அறிவுராஜா என்ற ஹரிராஜா(25). ஓட்டல் நடத்தியதோடு, கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த போது, அங்கு வந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. அறிவுராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. இந்த ஆத்திரத்தில் அறிவுராஜா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிவுராஜ் உறவினர்கள் சசி, மாயாண்டி, நிருபன், முத்துப்பாண்டி, ஹரி, சுதன் பாண்டி ஆகியோரை செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல் செல்லூர் வைத்தியநாதபுரம் அருகே பாக்கியநாதபுரம் 2வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி அசோக்குமார். இவர் மீது 2 கொலை வழக்கு மற்றும் இளம்பெண்ணை கடத்திய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நேற்று முன்தின இரவு அவரது வீட்டுக்கு வந்த கும்பல், அவரை கொலை செய்து விட்டு தப்பியது.

அசோக் குமாரின் நண்பர்களான தமிழ் செல்வன், விஜய், கார்த்திக், டப்பா பாலு மற்றும் சிலர், ‘‘ஒருவரை போட்டுத் தள்ளணும் வா’’ என இரவு 2.30 மணிக்கு வீட்டின் கதவை தட்டி எழுப்பியுள்ளனர். வர மறுத்த அசோக்குமாரை கத்தியால் தொடர்ந்து பல முறை குத்திக் கொன்று தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அசோக்குமாரின் தந்தை காட்டுராஜா கூறும் போது, ‘‘என் மகன் மீது வழக்கு உள்ளதால் கடந்த மாதம் சிறையில் இருந்து வந்ததும் சென்னைக்கு சென்று விடுமாறு கூறினேன். இனி எந்த குற்றசெயல்களிலும் ஈடுபடமாட்டேன் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்திருந்ததால், அவனது நண்பர்கள் அழைத்தும் அவர்களுடன் செல்லாமல் தகராறு செய்தான். இதில் ஆத்திரமடைந்தே என் கண் முன்பே அவனைக் கொன்று விட்டனர்’’ எனறார். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க செல்லூர் பகுதியில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: