மேலூர், அக். 16: மேலூர் அருகே மேலவளவு அழகிரிபட்டியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ராதிகா(24). திருமணமாகி 3 வருடமாகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்ததால் ராதிகா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பிரபு டெல்லியில் ஒரு ஓட்டலில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். ராதிகா மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலை முடிந்து சேக்கிபட்டியில் பஸ்சை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது கத்தியால் பிரபு குத்தியதில் சம்பவ இடத்திலேயே ராதிகா பலியானார். மேலவளவு போலீசார் தலைமறைவான பிரபுவை தேடி வருகின்றனர்.