சென்னை, அக்.16: சென்னை மாநகராட்சியில் 88க்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மயானங்கள் மின் மயானங்கள் ஆகும். இந்நிலையில், தி.நகரில் உள்ள கண்ணாம்மா பேட்டை மயானம் எஸ்பிஜி மயானமாக மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மின்மயானங்களை பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. அந்தப் புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, சென்னையில் உள்ள மின் மயானங்களில் காஸ் பயன்படுத்தும் வகையில் எல்பிஜி மயானங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், பெசன்ட்நகர், சைதாப்பேட்டை, நெசப்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் எல்பிஜி மயானங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.நகர் கண்ணாம்மா பேட்டையில் மின் மயானம் எல்பிஜி மயானமாக மாற்றப்படவுள்ளது. தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதால் இதற்கு ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ₹2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கண்ணாம்மா பேட்டையில் உள்ள இரண்டு மயானங்களை எஸ்பிஜி முறைக்கு மாற்றப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து மற்ற மயானங்கள் எல்பிஜி முறைக்கு மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.