×

தவறான ஆவணங்கள் சமர்ப்பித்த 99 பள்ளிகளின் அந்தஸ்து ரத்து மத்திய அரசு முடிவு : மாநில அரசுகளிடம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம்

வேலூர், அக்.16: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க மத்திய அரசு தயாராகி வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கற்றல் முறையில் செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறன் சோதிக்கும் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையில் உள்ளதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன.
தற்போது நாடு முழுவதும் 20 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளும், தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைய விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில் மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

அதன்பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்கள் ஆகியவற்றை சிபிஎஸ்இ வாரியத்துக்கு பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விவரங்களை சரிபார்த்து, சிபிஎஸ்இ இணைப்பு பெறுவதற்கான ஒப்புதல் அளிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமலேயே சிபிஎஸ்இயிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்தும், தங்களது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், சிபிஎஸ்இ பாடத்திட்ட இணைப்பு பெற்றுள்ளன. இதுகுறித்து சிபிஎஸ்இ ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 99 பள்ளிகளின் இணைப்பையும், அதன் அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் காலதாமதத்தை தவிர்க்க மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் காலங்களில் மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில கல்வித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல் பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிப்பார்த்து, ஒப்புதல் ஆணை கிடைத்த பின்னர், சிபிஎஸ்இ சார்பில் இணைப்பு கடிதம் மட்டுமே பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு சிபிஎஸ்இ கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Cancellation ,Govt ,schools ,CBSE ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...