×

திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி மனு

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று, பாதுகாப்பு வழங்கக்கோரி காதல் தம்பதி மனு அளித்தனர். திருவண்ணாமலை அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த காதல் தம்பதி எம்.கிரண்குமார்(24), டி.கலைச்செல்வி(22) ஆகியோர் நேற்று, பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, கிரண்குமார் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நானும், கலைச்செல்வியும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி, நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை நிலக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

இந்நிலையில், கலைச்செல்வியின் தந்தை தர்மராஜ் அடியாட்களை வைத்து எங்களையும், எங்களது குடும்பத்தாரையும், உறவினர்களையும் தாக்கி வருகிறார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நேற்று முன்தினமும் எங்களது உறவினர்களை, தர்மராஜ் அவரது ஆட்களுடன் வந்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவரும் தர்மராஜ் மற்றும் அவரது அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற போலீசார் இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags : office ,Tiruvannamalai SP ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்