சேலம் அருகே டிரைவரை தள்ளிவிட்டு காரை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலம், அக்.12: சேலம் மாவட்டம் காரிப்பட்டியை சேர்ந்தவர் மன்னர்மன்னன் (50). கார் டிரைவர். இவர் சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்பவரது காரை ஓட்டி வருகிறார். நேற்று காலை மன்னர் மன்னனுக்கு போனில் பேசிய ஒருவர், பழனிக்கு செல்ல வேண்டும் என அழைத்துள்ளார்.

இதையடுத்து காலை 8 மணியளவில் கன்னங்குறிச்சி சென்று காரை எடுத்துக் கொண்டு, சேலம் அரியானூர் அருகே மன்னர்மன்னன் வந்தார். அப்போது, பழனிக்கு செல்ல வேண்டும் என அழைத்தவர், இன்னும் 2 நண்பர்கள் வர வேண்டும். அதற்குள் டீ சாப்பிட்டு விட்டு செல்லலாம் என கூறியுள்ளார்.

இதையடுத்து காரைவிட்டு மன்னர்மன்னன் இறங்கியவுடன்,

அங்கு தயாராக இருந்த 2 பேர் அவரை தள்ளிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதில் கீழே விழுந்த மன்னர்மன்னன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மேற்கண்ட தகவலை போலீசாரிடம் கூறினார். இதையடுத்து மாநகர,மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மன்னர்மன்னன் காரை கடத்திய ஆசாமிகள், உண்மையில் அவரை தள்ளிவிட்டு கடத்தி சென்றனரா? அல்லது நாடகமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த கார்  பைனான்ஸ் மூலமாக வாங்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு 5 தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் காரை எடுத்து சங்ககிரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: