பரமத்திவேலூர், அக்.12: பரமத்திவேலூரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், மாணவிகள் ஊர்வலமாக கலந்து கொண்டனர். 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில், பெயர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும், பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்டம் முழுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பரமத்திவேலூரில் நேற்று, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கந்தசாமி கண்டர் கல்லூரியில், தொடங்கிய பேரணி பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை, பள்ளி சாலை, அண்ணா சிலை வழியாக பஞ்சமுக விநாயகர் கோவில் வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பரமத்திவேலூர் தாசில்தார் ருக்குமணி, துணை தாசில்தார் சசிகுமார், டிஎஸ்பி ராஜு, கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராசு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.