×

நாமக்கல் டிஇஓவுக்கு சிஇஓவாக பதவி உயர்வு

நாமக்கல், அக்.12:  நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அருளரங்கன்(56), முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட கல்வி அலுவலராக அருளரங்கன் பணியாற்றி வருகிறார். பள்ளி கல்வித்துறையில், கடந்த 88ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து, பின்னர் முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2016 ஜூலையில் ஆண்டிபாளையம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

கல்வித்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த அருளரங்கன் ஆசிரிய, ஆசிரியைகளின் கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் மீது உடனுக்குடன் முடிவு எடுப்பதில் தனித்திறன் பெற்றவர். இவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த டிரைவர், கடந்த 6 மாதத்துக்கு முன் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு மாற்றுபணி அடிப்படையில் மாற்றப்பட்டார். அதற்கு பதில் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு டிரைவர் நியமிக்கப்படவில்லை. இருப்பினும் அருளரங்கன், தனது அலுவலகம் சார்ந்த பணிகளை எந்தவித தொய்வும் இன்றி செய்து முடித்தார். பதவி உயர்வு பெற்றுள்ள அருளரங்கனை பல்வேறு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Namakkal ,CEO ,DEO ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...