×

எஸ்ஐயின் கணவர் மர்மச்சாவு

பரமத்திவேலூர், அக்.12:  நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கோடாங்கிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (35). தனியார் சிசிடிவி கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். இவரது மனைவி கிருத்திகா. கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். பிரபு தனது குடும்பத்தினருடன் கரூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், எஸ்ஐ கிருத்திகா நேற்று பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடி சென்றுள்ள நிலையில் பிரபு தனது சொந்த ஊரில் வசிக்கும் தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று காலை கரூர் செல்வதாக தாயாரிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ண சுவாமி கோயில் பக்கம் உள்ள முட்புதரில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு இறந்து கிடந்தது உதவி ஆய்வாளர் கிருத்திகாவின் கணவர் பிரபு என்பது தெரியவந்தது. பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜு, பயிற்சி டிஎஸ்பி சாந்தி, பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் பிரபுவின் கழுத்து துணியால் இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கை கடிகாரம், மோதிரம் உள்ளிட்டவை அப்படியே இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக யாரேனும் பிரபுவை கொலை செய்தார்களா அல்லது பிரபு தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Si ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...