திருச்சி, அக்.12: முசிறியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. திருச்சி ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வரும் அவரை கலெக்டர் ராஜாமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக ஆறுகளில் மணல் எடுப்பதை தடுப்பதற்கு வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முசிறி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழுவும், ஆமூர் வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழுவும், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் முசிறி மெயின் ரோடு வெள்ளூர் சத்திரம் என்ற இடத்தில் பிள்ளாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் இரு சக்கர வானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி பெற்ற பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த திருச்சி கலெக்டர் ராஜாமணி மருத்துவமனைக்கு சென்று விஏஓ நாகராஜனை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தினார்.